ஐக்கிய மக்கள் சக்தி திருடர்களுடன் எந்த வித டீல்களையும் போடாது

ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய அரசாங்கத்துடன் இணையும் என ஜனாதிபதி நினைத்துக் கொண்டிருந்தால் அது வெறும் கற்பனையே எனவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களுடன் தமக்கோ அல்லது தமது கட்சிக்கோ எந்தவித தொடர்புமில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வரிக்கு மேல் வரி விதித்து மக்களை ஒடுக்கும் ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியினதோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியினைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் கைகோர்க்க மாட்டார்கள் எனவும், இந்நாட்டை கொள்ளையடித்து, ஏமாற்றி, ஏலம் விட்டு, குடும்ப ஆட்சி நடத்தும் நபர்களுடன் எந்நிலையிலும் ஒன்றிணைந்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டொலர் திருட்டில் ஈடுபட்டவர்கள், இந்த நாட்டிலிருந்து அரச வளங்களையும், டொலர்களையும் திருடி அழித்தவர்கள், பண்டோரா பத்திரங்கள் மூலம் வெளிப்பட்ட மோசடிக்காரர்கள் இந்நாட்டிலோ, அல்லது உலகின் எந்நாட்டிலோ இருந்தாலும் எத்தகைய தகுதி தராதரங்களும் பார்க்காமல் இந்நாட்டின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும், அவ்வாறு திருடப்பட்ட பணம் மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் மீது வரி விதிப்பதாகப் பேசும் தற்போதைய அரசாங்கம், பண்டோரா பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தையும் வளங்களையும் எவ்வாறு எமது நாட்டிற்குத் திரும்பப் பெறுவது என்பதில் இதுவரை கவனம் செலுத்தவில்லை எனவும், ஆனால் இழந்த வளங்களை மீட்பதற்கான சட்டமும் அதிகாரமும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமுல்படுத்தப்பட்டு பணம் மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள ஊழல் ஒழிப்புச் சட்டமானது சமகாலம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் கருத்திற்கொள்ளப்பட்டு முன்வைக்கப்பட்ட போதிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் போன்ற நிதி மோசடிகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை எனவும்,  கடந்த காலங்களில் இடம்பெற்ற சீனி,  எரிவாயு, எரிபொருள் மோசடிகளை மறக்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வெளிநாடுகள் இதுபற்றி பேசினாலும் அதனை நாம் கவனத்தில் கொள்ளாதது பாரிய பிரச்சினைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடியது நல்லதுதான் என்றாலும் அவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்த ஒப்பந்தங்கள் தவறானவை எனவும், இந்த உடன்படிக்கைகளில் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவை திருத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வது நாட்டுக்கு நலவுகளை பயக்கும் விதமாகவே தவிர நாட்டை மேலும் படுகுழியில் இட்டுச் செல்வதாக அமைக்கூடாது எனவும், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல மறுத்த குழுவினர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை இன்று விதியின் கேலிக்கூத்தாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட தான் சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதன் அவசியத்தை பலமுறை வெளிப்படுத்திய போதும் அதனை கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான மொட்டு அரசாங்கம் முற்றாக நிராகரித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.