எக்ஸ் தளம் செயலிழப்பு

சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் தளம் நேற்று திங்கட்கிழமை செயலிழந்தமைக்கு உக்ரேனில் இருந்து வந்த ஐபி முகவரிகளைக் கொண்ட பாரிய சைபர் தாக்குதல் காரணம் என அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

“என்ன நடந்தது என்பது எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் எக்ஸ் தளத்தை வீழ்த்த முயற்சிக்கும் ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடந்தது. அதன் ஐபி முகவரிகள் உக்ரேன் பகுதியைச் சேர்ந்ததாக தென்பட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.

சைபர் தாக்குதல் உக்ரேன் அரசாங்கத்துடன் தொடர்புடையது என்பது உட்பட தாக்குதலின் தோற்றம் குறித்தும் மேலதிகமாக தகவல்களையும் எலோன் மஸ்க் வழங்கவில்லை.

உண்மையான ஐபி முகவரிகளை மறைத்து, வேறு இடத்திலிருந்து வருவது போலவும் காட்ட முடியும், மேலும் போலி இடங்கள் பெரும்பாலும் ஹேக்கர்களால் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

திங்கட்கிழமை காலை 6 அளவில் 20,538 பேரும், 10 மணியளவில் 40,000 பேரும் செயலிழப்பு குறித்து முறைப்பாடு செய்ததாக செயலிழப்பு கண்காணிப்பு தளமான டவுன்டெடெக்டர் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் முறைப்பாடுகள் குறைவடைந்ததோடு, எக்ஸ் தளம் வழமைக்கு திரும்பியது.

இந்த செயலிழப்பு உகளாவிய ரீதியில் ஏற்பட்டதாக டவுன்டெடெக்டரின் சர்வதேச தளங்கள் தெரிவித்தன.

மாலை 4 மணியளவில் ஒளிபரப்பான ஃபாக்ஸ் பிசினஸ் நேர்காணலின் போது, தளம் மீண்டும் செயல்படுவதாக எலோன் மஸ்க் கூறியுள்ளார்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க