அதிகாரிகள் பின்னால் புத்த பிக்குகள் ஏன் செல்கிறார்கள்? : இம்ரான் மஃரூப் கேள்வி
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்க முயன்ற விவகாரம் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் இம்ரான் மஃரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள, அரிசி மலை பொன்பரப்பி மலை என்னும் பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வைக்க முற்பட்டதும், அதனை தடுப்பதற்கு பொதுமக்கள் முனைந்த போது அங்கு இனமுறுகல் ஏற்பட்டதாகவும் அங்கு சிலை வைப்பதை தடுக்க முற்பட்ட பொதுமக்களுக்கு பிஸ்டலை காண்பித்து, அவர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
தொல் பொருள் திணைக்களத்தின் விசேட வர்த்தமானி அறிவித்தல்கள், மக்களின் பாரம்பரிய வசிப்பிடம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படாமலே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளோடு பெளத்த பிக்குகளும் செல்கிறார்கள், அதிகாரிகள் பார்க்கின்ற வேலைகளோடு இவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது? என்றும் இம்ரான் மஃரூப் நேரடியாக கேள்வி எழுப்பினார்.
மேலும், கேள்வி நேரத்தில் இந்த சிலை வைப்பு விவகாரம் தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் இம்ரான் மஃரூப் கேள்வி எழுப்பினார்.
எனினும், இது சம்பந்தமாக தனக்கு எந்தவொரு தகவலும்கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பில் ஆராய்ந்து விளக்கத்தை தருவதாகவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்