மன்னார் -நானாட்டான் பகுதியில் பட்ட பகலில் வீடு புகுந்து கத்திமுனையில் தங்க நகைகள் கொள்ளை

மன்னார் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில்  நானாட்டன் முருங்கன் வீதியில்  வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின்  வீட்டில் புகுந்த முகமூடி திருடன்  கத்தியை காட்டி மிரட்டி  கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக  தெரியவருகிறது.

இந்த சம்பவமானது நேற்றைய தினம்(24) புதன்கிழமை மாலை 4.30 மணியளவில்     இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆசிரியை  வீட்டில் தனிமையில் இருந்த போது  பின் பக்க வேலியால் வீட்டுக்குள் புகுந்த திருடன்  குறித்த வீட்டின் அருகில் வங்கிகளும் கடைகளும் இருந்த போதும்  சத்தம் போடக் கூடாது என்று  கத்தி முனையில் மிரட்டி ஆசிரியையின்  கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை கொள்ளையிட்டதுடன்  குறித்த ஆசிரியை கையில்  அணிந்திருந்த  வளையல்களை கழற்ற முடியாமல் விட்டு   திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த கொள்ளைச் சம்பவம்  தொடர்பில்  முருங்கன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் முருங்கன் பொலிஸார் வருகை தந்து சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியை யிடமிருந்து முகமூடித் திருடன் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள இரண்டரை(2-1/2) பவுன்   தங்கச் சங்கிலியை  கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.