நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா – ஹட்டன் (ஏ7) பிரதான வீதி ஆரம்பிக்கும் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வலப்பனை பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கி மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகி லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், சிறு சிறு காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளதாகவும் நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து லொறியின் வேகத்தினை கட்டு படுத்த முடியாமலும், தடுப்புக்கட்டை செயழிழந்ததன் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நழுவி சென்று மண் மேட்டில் மோதி ஏற்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
🚨சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து லேசான மழை மற்றும் அவ்வப்போது ஏற்படும் கடும் மூடுபனி காரணமாக, இந்தப் பகுதியில் உள்ள பிரதான வீதிகளில் பல்வேறு போக்குவரத்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
தொடர் மழை, மூடுபனி, அல்லது எண்ணெய்/தண்ணீர் கசிவு காரணமாக பிரதான வீதிகள் அதிகமாக வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கள் ஏற்படக்கூடும்.
அத்துடன் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி மற்றும் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி போன்றவை அதிகம் வழுக்கும் வீதிகள் உள்ளதென பல இடங்களில் எச்சரிக்கும் வீதி சமிக்ஞைகள் வைக்கப்பட்டுள்ளது.
எனவே அவற்றை அவதானித்து வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் கடும் மூடுபனி மற்றும் லேசான மழை பெய்யும் போது முகப்பு விளக்குகளை (Fog lights/Headlights) எரியவிட்டு பயணிக்கவும் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து இத்தகைய சூழல் அதிகம் என்பதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.