-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டத்தின் முக்கிய சந்திகள், பிரதான வீதிகளில், ஜூன் மாதம் ஆரம்பம் முதல் திடீர் சோதனைகள் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை இடம்பெற்று வருகின்றன.
போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக, அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது கல்முனை காரைதீவு நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கைகளில், பொலிஸ் மோப்ப நாய்கள் பங்கேற்றதுடன், குறிப்பாக அதிகாலை வேளைகளில் நெடுந்தூர சேவையில் கொழும்பிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற பேருந்துகளும் பயணிகளும் இதன்போது சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை மாவட்டம் 1-இன் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் பண்டார மேற்பார்வையில், சவளக்கடை சவளக்கடை பக்கியெல்ல மற்றும் தமண பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தலைமையிலான பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த நடவடிக்கையானது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அம்பாறை மாவட்டத்தின் பகுதிகளுக்கு பிற மாகாணங்களிலிருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க இவ்வாறான திடீர் சோதனைகள் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.