
வழமைக்குத் திரும்பிய மின் விநியோகம்
மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
வெள்ள அனர்த்தத்தினால் இடம்பெற்ற இச்சம்பத்தை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்பின் மீள் நிர்மாணத்தை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் அப்பகுதிகளுக்கான மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது.
மின்சார இணைப்பை மீள வழங்குவதற்கான துரித முயற்சிகளை இலங்கை மின்சாரசபையினர் மேற்கொண்டனர்.
இந்நிலையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தடைப்பட்டிருந்த மின்விநியோகமானது வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.
இதனால் மின்பாவனையாளர்கள் தங்கு தடையின்றி மின்சாரத்தினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்சாரத்தை வழங்குவதற்கு இரவு பகலாக முயற்சிகளை மேற்கொண்ட இலங்கை மின்சார சபையினருக்கும், அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கும் பொதுமக்கள் நங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

