5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் தொடரும் மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, குருணாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹாலி எல, எல்ல, பதுளை மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள், குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல, மாத்தளை மாவட்டத்தின் உக்குவலை மற்றும் ரத்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, மெனராகலை மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் பிபிலை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு முன்னெச்சரிக்கை காலப்பகுதியில் நிலத்தில் வெடிப்பு உருவாகுதல், ஆழமாகும் வெடிப்புகள் தரை உள்ளிறக்கங்கள், நிலத்தில் இருந்து திடீரென நீர் ஊற்றுக்கள் ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் மண்சரிவு ஏற்படும் அபாயம் கொண்ட பகுதிகளில் இருந்து உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .