
2026ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு!
2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, இலங்கையில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் என மக்களுக்கு ஜனாதிபதி உறுதியளித்தார்.
ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை கட்டுமானப் பணிகள் மூலம் மட்டும் உருவாக்கப்படுவதில்லை, மாறாக பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
முழு பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ள இத்தருணத்தில், 2026ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
