11 டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு
அனுராதபுரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
முள்ளிக்குளம் தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் டொல்பின்களை மீட்டுள்ளனர்.
அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகள் உயிரிழந்த டொல்பின்களின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன் அது தொடர்பிலான அறிக்கை புத்தளம் நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் போது வலையில் சிக்கியதால் அவை இறந்ததாக மருத்துவர்கள் ஊகிக்கின்றனர்.
மேலும் அவற்றின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக டொல்பின்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.