
பிக்கப் வாகனம் மோதியதில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழுள்ள தாமரைக்கேணி, சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிக்கப் வாகனமொன்றினால் மோதுண்டு குடும்பப் பெண்ணொருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் மீராகேணி, நேயம் கிராமத்தைச் சேர்ந்த ரீ. சாமிளா (வயது 46) என்ற இரு பிள்ளைகளின் தாயே சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்தில்பலியாகியுள்ளார்.
சம்பவதினம் பகலுணவுக்காக அவர் சவுக்கடியிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று பகலுணவை முடித்து விட்டு பிற்பகல் 04.00 மணியளவில் தனது வசிப்பிடமான நேயம் கிராமத்தை நோக்கி, அவரது சகோதரி மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வர, அவரும் அவரது 10 வயது மகனும் மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அவ்வேளையில், தாமரைக்கேணி நாற்சந்தியை அவர்கள் அடையும்போது, சவுக்கடி கடற்கரை பக்கமாகவிருந்து வேகமாக வந்த பிக்கப் வாகனத்தினால் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது சகோதரியும் அவரது 10 வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பலியான பெண்ணின் சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, பெண்ணும் அவரது சகோதரியும் மகனும் பயணித்த, மோட்டார் சைக்கிளை மோதிய, பிக்கப் வாகனத்தைக் கைப்பற்றிய ஏறாவூர்ப் பொலிஸார் பிக்கப் வாகன சாரதியைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


