
பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தின் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்துனர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, அவிசாவளையில் தனியார் பேருந்தின் நடத்துனரான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பயணி நேற்று ஞாயிற்றுக்கிழமை நாவின்ன பகுதியில் இருந்து குறித்த பேருந்தில் ஏறி கொடகம வரை பயணிப்பதற்கான பணத்தை செலுத்திவிட்டு சாரதி இருக்கைக்கு அருகில் நின்றுள்ளார்.
மஹரகம ஆசிரியர் கலாசாலைக்கு அருகாமையில் வைத்து பேருந்தின் பின்புறம் செல்லுமாறு நடத்துனர் பல முறை பயணியிடம் கூறியதாகவும், வாக்குவாதத்தின் போது, நடத்துனர் பயணியை தாக்கி காதைக் கடித்து விழுங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, குறித்த பயணி, மெகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்தி, காதின் ஒரு பகுதியை நடத்துனர் கடித்துள்ளதாக மெகொட பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
பின்னர் பேருந்தில் மறைந்திருந்த நடத்துனர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்த பயணியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாக மெகொட பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
