ஹட்டன் பேருந்து விபத்து : மூவர் பலி, 30ற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்!

ஹட்டன் – மல்லியப்பு பகுதியில், பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி, 20 அடி பள்ளத்தில் பாய்ந்து, இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவனும், ஆண் ஒருவரும் பெண் ஒருவருமாக இரண்டு வயோதிபர்கள், என மொத்தமாக மூவர் உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

விபத்தில் பேருந்து சாரதி உட்பட 30ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சிலர் கண்டி மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.