
விளைந்த வேளாண்மையை அறுவடை செய்ய விடாதவர்கள் தான் தற்போது ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை தர வேண்டும்: விவசாயிகள்
மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்யவிடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் அமைப்புகள் என்ற பெயரில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று தடுத்தனர் இதனால் இன்று மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது இதை தடை செய்தவர்களே இந்த நஷ்டத்தை தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற கால நிலை காரணமாக இரு தினங்களாக பெய்துவரும் கனமழையினால் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு தெரிவித்தனர்.
2024-2025 ஆண்டு பெரும் போக வேளாண்மை செய்கை தொடர்பான முன்னோடி கூட்டத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நெல் அறுவடை என தீர்மானிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. இருந்தபோதும் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அறுவடை செய்யும் நிலையில் வேளாண்மை விளைந்துள்ளதுடன் அறக்கொட்டி பூச்சி தாக்கமும் ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதும் அனர்த முகாமைத்துவத்தினால் எதிர்வரும் 18 ஆம் திகதியில் இருந்து கனமழை பெய்யும் எனவே விவசாயிகள் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசாங்க அதிபரை சந்தித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் பாரியளவில் விளைந்த வேளாண்மை மற்றும் அறக்கொட்டி பூச்சி தாக்கம் ஏற்பட்ட வேளாண்மை அறுவடை செய்ய வேண்டியுள்ளது. ஆகவே அறுவடையை செய்ய அந்தந்த அமைப்புக்களே தீர்மானித்து முடிவெடுக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.
இதன் போது அரசாங்க அதிபர் வாய்மூலமாக உத்தரவு தந்தார். அமைப்புக்கள் சம்மதித்தால் உடனடியாக அறுவடை செய்யுமாறு தெரிவித்தார். அந்த வகையில் ஒரு விவசாயி அறுவடை செய்ய ஆரம்பித்ததையடுத்து அதனை சில அமைப்புக்கள் தெரிந்து கொண்டு வேறு பெயர்களை சூட்டிக் கொண்டு பச்சைக்காய்களை வெட்டப் போகின்றார்கள் என பொய்பிரச்சாரத்தை தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து அறுவடை செய்வதை தடுத்தனர்.
இதனால் இன்று கனமழை வெள்ளத்தினால் வயல் நிலங்கள் மூழ்கி தண்ணீரில் மிதக்கின்றது விவசாய அமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து கடந்த 10 வருடம் விவசாய அமைப்பு தலைவராக இருந்து சேவை செய்த நான் கடந்த 3 வருடத்திற்கு முன்னர் எனது வயது காரணமாக அதில் இருந்து விலகிவிட்டேன்.
தற்போது பார்கின்ற போது வேதனையாக இருக்கின்றது. ஒரு தொழிலை செய்கின்றவன் அந்த தொழிலில் அனுபவம் பெற்றவனாக இருக்கவேண்டும். ஆனால் எதுவுமே தெரியாத ஒரு ஏக்கர் காணி இல்லாதவர்கள் இங்கு வந்து இந்த விவசாயத்தை பற்றி கதைக்கின்றார்கள்.
மூன்று அழிவு இடம்பெற்றுள்ளது வெள்ளம், பூச்சி, நேரத்துக்கு வெட்டவில்லை இந்த காரணத்தால் இந்த அழிவு ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தீர்மானத்தை மாற்றி தந்திருக்கலாம் விளையாதவர்கள் பிந்தி அறுவடை செய்ய முடியும் ஆனால் அவர்கள் நகரில் இருந்து கொண்டு பச்சைக்காய் என சொல்லிக் கொண்டு எங்களுடைய வாழ்வாதாரத்தை நாசமாக்குகின்ற வேலையை செய்கின்றனர்.
முழு நெல்லும் முளைத்துவிட்டது இதனை அறுவடை செய்தும் பிரயோசனம் இல்லை இது சாப்பாட்டுக்கும் எடுக்க முடியாது வியாபாரியும் எடுக்க மாட்டான் மனித உரிமை குழுவில் முறைப்பாடு செய்தவர்களிடம் இந்த நஷ்டத்தை பெற்றுதரவும்.
அரசாங்க அதிபர் விளைந்த வேளாண்மையை வெட்டுமாறு தெரிவித்தார் அவர் தெரிவித்தது போல் நாங்கள் வெட்டியிருந்தோம் என்றால் பாதுகாப்பாக நெல்லை எடுத்திருக்கலாம். ஆனால் தற்போது உன்னிச்சைக்குளம் வான்கதவு திறக்கப்பட்டுள்ளது இதனால் பாரிய அழிவு ஏற்படவுள்ளது.
விவசாயம் தெரியாத சில வெளிநபர்கள் அமைப்பு என இருப்பவர்கள் தடையிட்டு எமது வேளாண்மை நாசமாகியுள்ளது இந்த நஷ்டத்தை அரசாங்கம் எப்படி தரமுடியும். மனித உரிமை குழுவிற்கு சென்று தடை இட்டவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்ன பதில் சொல்ல போகின்றனர். இவர்களிடம் நஷ்டத்தை வாங்கி தரவும் என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்