வாகன இறக்குமதிக்கு அனுமதி: அதி விசேட வர்த்தமானி வெளியீடு

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று திங்கட்கிழமை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சரான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 27 வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விதிமுறைகளின் கீழ் நாணய கடிதங்கள் வழங்கப்பட்ட வாகனங்களை விடுவிப்பதற்குச் சுங்க பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி வரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன இறக்குமதியாளர்கள் அல்லாத நபர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் எனக் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன இறக்குமதி தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்காமல், தொடர்புடைய விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை, இறக்குமதியாளர் 90 நாட்களுக்குள் தனது சொந்த செலவில் மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்