
வவுணதீவில் விவசாயியை தாக்கிய யானை மட்டக்களப்பு நகருக்குள் புகுந்து அட்டகாசம்
வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாச்ச சென்ற விவசாயி நேற்று வியாழக்கிழமை யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிர் இழந்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
நாவற்காடு மஞ்சுகட்மைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாச்சுவதற்காக நேற்று இரவு சென்றவர் காலை வேளையாகியும் வீடு திரும்பிவராத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த நிலையில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் குறித்த யானையை விரட்டியுள்ளனர்.
இவ்வாறு மக்களால் விரட்டப்பட்ட யானை வவுனதீவு வீதி வழியாக மட்டக்களப்பு நகருக்குள் புகுந்து கொத்துகுளத்து மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள மதில்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.