வழக்கில் உள்ள நபர் உயிரிழப்பு: சடலத்தை தோண்டுமாறு நீதிமன்றம் உத்தரவு

-யாழ் நிருபர்-

மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபர் உயிரிழந்த நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அவரது சடலத்தை தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவை பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது – 40) என்பவரது சடலத்தையே தோண்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மன்னார் – இலுப்பை கடவை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.

இந் நிலையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மூளைக்காய்ச்சல் காரணமாக குறித்த நபர் உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த நிலையில் கிராம சேவகரும் அதற்கு இணங்க மேலதிக செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை கல்லூண்டாய் சென். பீற்றர் தேவாலய சேமக்காலையில் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இது இவ்வாறு இருக்கையில் குறித்த நபர் மீதான விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபர் அங்கு பிரசன்னமாகவில்லை. குறித்த நபர் உயிரிழந்தமை மற்றும் அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன்பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலத்தை புதைத்த பகுதி மல்லாகம் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உள்ளமையால் இது குறித்து மல்லாகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் குறித்த நபரின் சடலத்தை நாளையதினம் வெள்ளிக்கிழமை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் நாளையதினம் குறித்த நபரின் சடலம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.