வருங்கால மனைவியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் திருமணம் முடிக்கவிருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.

இந்நிலையில், விடுமுறை நாட்களில் வீடு திரும்பிய பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று புதன்கிழமை அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தையடுத்து பெண்ணை பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கியுள்ளார்.

அதன் பின்னர், காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, பொலிஸாருக்கு பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று வாழைச்சேனையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்