யானையை கண்டு ஆற்றில் குதித்த தந்தையும் மகனும்: பலியான தந்தை

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன தந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மயிலவெட்டுவான் ஊப்போடை வீதியைச் சோந்த ஞானப்பிள்ளை அரணாகரன் (வயது – 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தந்தையும் அவரது 14 வயதுடைய மகனும் காட்டையண்டிய பகுதியில் விறகு வெட்டி வருவதற்காக நேற்று முன் தினம் சனிக்கிழமை காலை 9 மணியளவில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் யானையை கண்ட இருவரும் யானையிடமிருந்து தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள முந்தனையாற்றில் குதித்துள்ளனர்.

இதனையடுத்து நீரில் மூழ்கிய 14 வயது சிறுவன் வெளியில் வந்த நிலையில் தந்தையார் நீரில் இருந்து வெளிவராததையிட்டு தேடிய போது, அவரை ஆற்று நீர் இழுத்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளதையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உறவினர்கள் அந்த ஆற்றுப் பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் தந்தை நேற்று சடலமாக மீட்கப்படுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியானாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்