முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசே பொறுப்பேற்க வேண்டும்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட விசேட தீர்மானத்திற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படைகளின் உறுப்பினர்கள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்காக பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரமைக்கப்படவுள்ளன.

இந்தநிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதிகளது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உப தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படைகளின் உறுப்பினர்கள் நீக்கப்பட்டமையானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.