
மிகவும் நூதனமான முறையில் சங்கிலி அறுப்பு
-யாழ் நிருபர்-
இன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை – தொல்புரம் பகுதியில் மிகவும் நூதனமான முறையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலை 9.30 மணியளவில், அப்பகுதியில் உள்ள வீட்டின் படலைக்கு அருகே இருந்த பெண்மணி ஒருவரிடம் மோட்டார் சைக்கிள் வந்த இருவர் சாத்திரம் சொல்லும் கோவில் எங்கு உள்ளது எனக் கேட்டவேளை அவர்களுக்கு வழி சொல்வதற்கு அந்த பெண்மணி அருகில் வந்தார்.
இதனையடுத்து அந்த பெண்மணியினது கழுத்தில் இருந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் கோயிலுக்கு செல்வது போல கையில் வாழை இலையும் பூஜைப் பொருட்களும் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.