
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்லை உதயசூரியன் கழகமும் இணைந்து நடத்திய வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர சர்வதேச பட்டப்போட்டி உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டார்.
பல வகையான பட்டங்கள், மழைக்கு மத்தியிலும் போட்டியில் பங்கேற்றன. வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு ஆளுநர் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
அத்துடன் இந்த நிகழ்வில் கல்விச் சாதனையாளர்களையும் ஆளுநர் கௌரவித்தார்.
இங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர்,
யாழ். மாவட்டச் செயலாளராக 2018ஆம் ஆண்டு இருந்தபோது, இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்ததுடன், இந்த நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
எமது மண்ணின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் இந்தப் போட்டிகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், இது பாராட்டப்படவேண்டிய விடயம் எனவும் குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரதும் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பமாக இந்தப் பட்டப்போட்டி அமைந்துள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக சிந்தித்து பட்டங்களை உருவாக்குவது சிறப்பானது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில், பருத்தித்துறை பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசீலன், வல்வெட்டித்துறை நகர சபையின் செயலாளர் கிசோக்குமார், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.