மட்டு. பேத்தாழையில் தரம் 5 புலமை பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

தரம் 5 புலமை பரீட்சையில் சித்தி பெற்று சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்குடா கல்வி வலயத்திலுள்ள பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த பாடசாலையில் 12 மாணவர்கள் சித்திபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் இறைவழிபாட்டுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியன.

சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும், கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர்களுக்கு நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராட்டி பரிசில்களும் வழங்கி வைத்தார்.

இதன்போது 2013ஆம் ஆண்டிலிருந்து சித்தி பெற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது, அதே போன்று இம்முறையும் சித்தியடைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் இராஜாங்க அமைச்சரினாலும் அமைச்சரின் தாயாரினாலும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு சிறுவர் சேமிப்பு கணக்கு திறக்கப்பட்டு புத்தகமும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பி.எஸ்.ஐ இணைப்பாளர் சு.சிவராசா, ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி சௌ. அருளேந்திரன் மற்றும் ஏனைய பாடசாலையின் அதிபர்கள், வங்கி முகாமையாளர், ஆசிரியர்கள் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், இராஜாங்க அமைச்சரின் தாயார், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.