
மட்டக்களப்பு மாநகர சபையினால் கள்ளியங்காடு மயானத்தில் துப்புரவு செய்து அழகுபடுத்தும் பணி
– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் காணப்படும் பொது மயானங்களை துப்பரவு செய்யும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
அதன்படி நகரின் மத்தியில் அமைந்துள்ள கள்ளியங்காடு மயானத்தில் துப்பரவு செய்து அழகுபடுத்தும் பணிகள் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன.
தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவும் முன்னெடுக்கப்பட்ட இந்த சிரமதானப் பணிகளில் மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் த.டமராஜ் உள்ளிட்ட சுகாதார பகுதி உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சிரமதானப் பணிகளின் போது பொதுமக்கள் தமது இறுதி சடங்குகளை அசௌகரியங்கள் இன்றி முன்னெடுப்பதற்கு ஏதுவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள உள்ளக பாதைகளும் சீரமைக்கப்பட்டதுடன், இரவு வேளைகளில் அப் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் LED மின் குமிழ்கள் இதன்போது பொருத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.