
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் விபத்து
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில், சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே, கல்முனைப் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி, பின் உயர் அழுத்த மின் இணைப்பு கம்பத்தையும் உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, லொறியின் முன் பகுதி மின்சார கம்பம் மற்றும் மதிலும் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்தின் காரணமாக அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது, பின்னர் மின்சாரம் வழமைக்குத் திரும்பி உள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, காத்தான்குடி பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.
மட்டக்களப்பு கல்முனை சாலையில் பயணிக்கும் வாகனங்கள், அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அப் பகுதியில், வீதியில் அதிக வளைவுகள் அமைந்துள்ளதால், சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனத்தை செலுத்த வேண்டும் எனவும், தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதாலும், மிகவும் அவதானமாக வாகனங்களை ஓட்டுநர்கள் செலுத்த வேண்டும், எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்