
மட்டக்களப்பு கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக மீண்டும் விபத்து
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இடத்தில் இன்று காலை கார் வீதியை விட்டு விலகி அருகிலிருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து இடம்பெற்றது.
இதன்போது சாரதி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன், கார் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த கார் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி மின்கம்பிகள் அறுந்த நிலையில் அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது.
இது இவ்வாறு இருக்க ஸ்தலத்திற்கு விரைந்த மின்சாரசபை ஊழியர்கள் தடைப்பட்டிருந்த மின்சாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் தனது மகனுடன் சென்ற ஒருவர் குறுக்கே இருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எனினும் அவருடன் பயணித்த மகன் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அதே இடத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குறித்த மின் கம்பிகள் அறுந்திருந்தாலும் மின்சார கம்பி பழுதுபார்க்கும் வேலைகள் நடைபெறுகின்றது என்பது தொடர்பாக சமிக்ஞை ஏதுமின்றி மின்சார சபை ஊழியர்கள் செயற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்துச் சம்பவம் மீண்டும் அதே இடத்தில் இடம்பெற்றதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்நிலையில் ஸ்த்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்