புது வீட்டிற்கு குடிபெயர்ந்த தம்பதி: அலமாரியில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனைச் சேர்ந்தவர் அனிதா ரெய்னியர் இவரும், இவரது கணவரும் புதிய வீட்டை வாங்க முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாஷிங்டனில் உள்ள சியாட்டில் நகருக்கு வெளியே ஒரு புதிய வீட்டை வாங்கினர். கடந்த டிசம்பரில் அவர்கள் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில், ரெய்னியரும் அவரது கணவரும் தங்கள் புதிய வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிட்டனர்.

அப்போது, அவர்கள் சமையலறைக்குச் சென்று அங்கு என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் சமையலறையில் உள்ள ஒரு அலமாரியை பார்த்துக்கொண்டிருந்தார். அதில் ஏதோ இருப்பதை பார்த்து ரெய்னியர் அதிர்ச்சியடைந்தார். அதை எடுத்துப் பார்த்தபோது அது அவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அங்கு அவர்களுக்கு கிடைத்தது ஒரு காகித துண்டுதான். ஆனால், அதில் எழுதியிருந்த வார்த்தைகள் த்ரில்லர் படங்களில் வரும் காட்சிகளை நினைவு படுத்தியது.

அந்த காகிதத்தில், “தரைக்கு அடியில் பார்க்க வேண்டாம்” என எழுதியிருந்தனர். காகிதத்தின் பின்பக்கம், “29065300489382” என்ற எண் இடம்பெற்றிருந்தது. அந்த எண்கள் எதைக் குறிக்கிறது என்று கண்டுபிடிக்க நினைத்த அந்த தம்பதியினர் இந்த சம்பவம் குறித்து ரெடிட்டில் பதிவிட்டனர். அதில், “அலமாரியின் ஒரு தட்டில் இந்தக் குறிப்பைக் கண்டேன், முன்னாள் உரிமையாளர் என்னை ட்ரோல் செய்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியவாறு அந்த புகைப்படங்களை பகிர்ந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ரெய்னர் ஊடகத்து அளித்த பேட்டியில், “நானும் என் கணவரும் சமையலறையில் பேசிக் கொண்டிருந்தோம். அலமாரியை எப்படி அமைப்பது என்று முடிவு செய்து கொண்டிருந்தோம். அப்போது அலமாறியின் உள்ளே பார்த்த நான், திடீரென்று ‘அது என்ன?’ என்று அலறினேன். அலமாரியின் மேற்புறத்தில் இறுக்கமாக ஒட்டப்பட்டு நன்கு மறைக்கப்பட்ட காகிதத் துண்டு எங்களுக்கு கிடைத்தது. சாதரணமாக பார்த்தால் அது நமக்கு முற்றிலுமாக தெரியாது. இங்கே ஏதோ மர்மம் இருக்கலாம் என்று நினைக்கும்போது வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் இருந்தது. எங்கள் யூனிட் எண், அஞ்சல் குறியீடு, கட்டிடம் கட்டப்பட்ட ஆண்டு போன்றவற்றால் அந்த எண்களை பிரித்து, தொலைபேசி எண் அல்லது ஏதாவது ஒன்றைப் பெற முடியுமா என்று பார்த்தோம். ஆனால் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை” என்றார்.

இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் பலரும், இந்த வீட்டில் இதற்கு முன்பு குடியிருந்தவர்கள் இந்த ஜோடியை கேலி செய்திருக்கலாம் என்றும் இது வெறும் நகைச்சுவைப் பரிசு என்றும் கூறினர். மேலும், அந்தத் தம்பதியினர் இப்போதைக்கு தரையை உடைத்து அதன் அடியில் என்ன இருக்கிறது? என்று பார்த்த எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளனர். அந்த ரகசியச் செய்தி இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.