
புதிய பொய்களுடன் மக்களை சந்திக்கிறது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் – சஜித் பிரேமதாச
கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போலி வாக்குறுதிகளை வழங்கிய தேசிய மக்கள் சக்தி தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய பொய்களுடன் மக்களை சந்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தலவாக்கலையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும் ஒரு யுகம் தற்போது உருவாகியுள்ளது.
கடந்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையினூடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தது.
தற்போது அதே பாதையில் பயணிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் அவ்வாறான கொள்கைகளை முன்னெடுக்கும் யுகத்தைக் கொண்டு செல்கின்றனர்.
அரசாங்கம் வாக்குறுதியளித்த வளமான நாடு, மக்களுக்குக் கிடைக்கவில்லை.
மூன்றாவது முறையாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய பொய்கள் மற்றும் புதிய வாக்குறுதிகளுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களிடம் செல்கின்றது.
தற்போதைய அரசாங்கம் உர மானியத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்கட்டணம் குறைக்கப்படும் எனத் தேர்தல் மேடைகளில் கூறியிருந்தனர்.
எனினும் தேர்தலின் பின்னர் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.