பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தின் 75 ஆவது ஆண்டினைச் சிறப்பிக்கும் வகையில் பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுமதியுடனும், பத்மநாபா ஞாபகார்த்த அமைப்பின் அனுசரணையுடனும், மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்குக் கழகம் 32 கால்பந்தாட்ட அணிகளிடையே நொக்கவுட் முறையில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட சுற்று போட்டி கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக சுற்றுப்போட்டி இடம்பெற்றுவந்த நிலையில் இறுதி போட்டியில் ஏறாவூர் எஸ்.எஸ்.சி கழக அணியினரும் கஞ்சிரங்குடா ஜெகன் அணியினரும் மோதிக்கொண்டனர்.

இதன்போது, ஏறாவூர் எஸ்.எஸ்.சி கழக அணி ஒன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தின் 75 ஆவது ஆண்டுச் சவால் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் தலைவர் பா.செல்வராஜா தலைமையில் நடைபெற்ற இறுதி போட்டி நிகழ்விற்கு, பிரதம அதிதியாக டான் தொலைக்காட்சி குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன் கலந்து சிறப்பித்தார்.

இறுதி போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் உபதலைவர்களான அசோக்குமார், பரமராசா, செயலாளர் பத்மராஜா கோபிராஜ், பொருளாளர் த.ரஜினிகாந்த், சுற்றுப்போட்டி குழுத் தலைவர் ரோகினி புவனசிங்கம், மட்டக்களப்பு போக்குவரத்து சபை முகாமையாளர் க.ஶ்ரீதரன், பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண அனுசரணையாளர்கள், பத்மநாபா மக்கள் முன்னணியின் உறுப்பினர் தோழர் சுகு உள்ளிட்ட பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்