
பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள்: நீதி கிடைக்குமா?
-யாழ் நிருபர்-
வவுனியா பொது வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தை ஒன்றுக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள் தொடர்பில் வெளி வந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் உள்ளடங்களாக நால்வர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த நான்காம் திகதி வவுனியா பொது வைத்தியசாலையில் குழந்தை ஒன்றைப் பிரசவித்த தாய் குறித்த விடுதிக்கு பொறுப்பான தாதிய சகோதரி மற்றும் விடுதியில் பணியாற்றிய பெரும்பான்மையின தாதிய உத்தியோத்தர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தது.
தம்பதியினர் ஒருவருக்கு குழந்தை கிடைத்த நிலையில் வைத்தியசாலையில் சிங்கள மொழி பேசும் தாதியர் ஒருவருக்கும் குழந்தையின் தந்தைக்கும் இடையில் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.
குறித்த கருத்து வேறுபாடு கடந்த சனிக்கிழமை மாலை வாக்குவாதமாக மாறிய நிலையில் தந்தையார் குறித்த தாதியருடைய பெயரைக் கேட்டுள்ளார் அவரும் பெயரை கூறிவிட்டுச் சென்றார்.
பின்னர் தந்தையாரை அழைத்த தாதியர் அழைத்து என்னுடைய பெயர் உங்களுக்கு எதற்கு எனக் கேட்க உங்களைப் பற்றிய முறைப்பாடு மேற்கொள்ள வேண்டும் என குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.
அதற்கு அதிக கோபம் அடைந்த அந்த தாதியர் மருத்துவ சிட்டையை முடிவுறுத்தி, வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு கூற இது அரச மருத்துவமனை உங்களுக்கு அதனை கூற உரிமை இல்லை எனக் கூறிவிட்டு தந்தை வீடு சென்றார்.
15 நிமிடங்களின் பின்னர் மனைவி அழைப்பு எடுத்து 7 ஆம் விடுதியில் உள்ள தலைமைத் தாதியர் நான் சொன்னால் தான் தாதியர்கள் உங்கள் பிள்ளைக்கு மருத்துவம் செய்வார்கள். உங்கள் கணவர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதனால் நாங்கள் செய்ய மாட்டோம் என்றாராம்.
அதனை ஏற்றுக் கொண்ட அவர் தாதியர்களிடமும், வைத்தியர் அஸ்ராவிடமும் உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு கூறிய நிலையில் விடுகைப் படிவத்தில் எனது மனைவியார் 12.08.2023 இரவு 10.28 மணிக்கு கையொப்பமிட்டார்.
அதன் பின்னர் குழந்தையின் மருத்துவ படிவங்களை கோரிய போது இந்த நேரத்தில் இந்த வேலை தங்களுக்கு செய்ய முடியாது அதற்கான நேரம் வரும் போது மாத்திரமே நாங்கள் செய்வோம் என விடுதியில் தெரிவிக்கப்பட்டது.
பத்து நாட்களாகக் பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் தங்களது அதிகாரத்தை கைவரிசையாக வைத்து எங்களை பழிவாங்கியதுடன் அவர்களின் சேவையையும் துஸ்பிரயோகம் செய்ததாக தந்தையாரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சம்பவம் ஊடகங்களில் வெளிவந்து சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் உட்பட நால்வர் கொண்ட விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சுகாதார அமைச்சில் கொரோன இடைதங்கல் நிலையத்தில் இடம் பெற்ற மோசடி, கொரோனா தடுப்பூசி வழங்கலில் இடம் பெற்ற மோசடி, மந்திகை ஆதார வைத்திய சாலையில் இடம்பெற்ற நிதி மோசடி, தீவகம் வேலணை வைத்திய சாலையில் சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்த குடும்பப் பெண் இவ்வாறு வடக்கு சுகாதாரத்துறையில் இடம்பெற்ற முறைகேடுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இவ்வாறு பல முறைகேடுகள் இடம்பெற்றதாக ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்ட போதும் குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்பட்டதாகவோ பணி நீக்கம் செய்யப்பட்டவும் இல்லை.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அதே துறை சார்ந்தவர்கள் விசாரணைகளை மேற்கொள்வது நீதியை பெற்று கொடுக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்