நுவரெலியா வசந்தகால மலர் கண்காட்சி இன்று ஆரம்பம்

நுவரெலியா வசந்தகால மலர் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை நுவரெலியா விக்டோரியா பூங்காவனத்தில் ஆரம்பமானது.

மலர் கண்காட்சி நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் மற்றும் நுவரெலியா மாநகர சபையின் நகராட்சி ஆணையாளர் ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மலர் கண்காட்சியை இன்றும் நாளையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பறவைகள், செல்ல பிராணிகள் ஆகிய வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விக்டோரியா பூங்கா முழுவதும் புதிதாக நடப்பட்ட பூச்செடிகள் முழுமையாக வளர்ந்து இதில் பூக்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

நுவரெலியாவில் ஏப்ரல் மாதம் முழுவதும் வசந்த காலம் என்பதால் எதிர்வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.