நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

-நுவரெலியா நிருபர்-

வருட இறுதி விடுமுறைகளை முன்னிட்டு நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் நுவரெலியாவிற்கு  படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி,  நுவரெலியா கிரகரி வாவி, பிரதான நகர் ஹக்கல பூங்கா, விக்டோரியா பூங்கா, உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற இடங்களுக்கு  அதிகம் செல்வதனால் நுவரெலியாவில் உள்ள  வாடகை வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையிலும் , நத்தார் பண்டிகை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர்கிறது இதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடு முறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

நுவரெலியா பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளமையினால் மாலை நேரங்களில் பிரதான வீதிகளில் வாகன நெரிசல்களும் ஏற்பட்டுள்ளன. இதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து அதிக பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.