நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு: வயோதிப பெண் பாதிப்பு

-பதுளை நிருபர்-

பதுளை – பசறை பிரதேச சபை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் குளோரின் சிலிண்டரில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கசிவு காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

பசறை வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பசறை பிரதேச சபை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் குளோரின் சிலிண்டரில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் சிவு ஏற்பட்டுள்ளது.

இதன் போது அருகில் இருந்த வீட்டில் தங்கியிருந்த 76 வயதுடைய வயோதிப பெண் குளோரின் வாயுவால் பாதிக்கப்பட்டு பசறை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பசறை வைத்தியசாலை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சானக தன்கந்த தெரிவித்தார்.

இதேவேளை, பசறை ஆதார மருத்துவமனையில் நாற்பது நோயாளிகள் வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகவும் மேலும் குளோரின் கசிவுக்கு அருகிலுள்ள வார்டுகளில் இருந்த இருபது நோயாளிகள் தற்காலிகமாக ஹாப்டன் மற்றும் லுணுகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பசறை பிரதேச சபையின் சபை செயலாளர் டபிள்யூ.எம்.என்.வனசிங்க கூறுகையில், நேற்று மதியம்  பிரதேச சபைக்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட குளோரின் சிலிண்டர்களில் ஒன்றில் கசிவு ஏற்பட்டது

உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, குளோரின் கசிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சிலிண்டரை பாதுகாப்பாக அகற்ற தேசிய நீர் வழங்கல் மற்றும் பதுளை தீயணைப்புத் துறையின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியில் உள்ள மற்ற சிலிண்டர்களும் சோதனை செய்யப்பட்டு நிலைமை இப்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்