தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை: பிரதீப்

-பதுளை நிருபர்-

கடந்த காலங்களில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மக்களுக்கு உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லையென பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சாந்தலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்

அலுவலகத்தில் பணிபுரிகின்ற உத்தியோகஸ்த்தர்கள், நிர்வாகத்தினருக்கு புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து அதிகாரிகள் முன் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என்பது மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு பாரிய சேவையினை செய்ய கூடிய ஒரு அமைச்சாகும் எமது சமுகத்திற்கு சென்றடைய வேண்டிய சேவைகள் சென்றடைந்ததா என்பது குறித்து சற்று யோசிக்க வேண்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு அதிகூடிய பெருபான்மையை மக்கள் வழங்கியிருக்கிறார்கள் மக்களுக்கு சேவை செய்யும் அரச உத்தியோகத்தர்களாகிய நம் மீது மக்களுக்கு நல்ல அபிபிராயம் கிடையாது. சாதாரண விடயத்தை பொதுமக்கள் நிறைவேற்றிக்கொள்ள பணிமனைகளுக்கு செல்லும் பட்ஷத்தில் அவர்களை அலைக்கழிப்பது நமது நாட்டில் ஒரு வழமையான செயலாக இருக்கிறது.

இதேவேளை அரச நிறுவனங்களில் கையூட்டல் பெறும் சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம் பெறுகிறது எனவே தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் கிலின் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். இந்த திட்டத்தின் ஊடாக சிந்தனை ரீதியிலான மாற்றங்களை நாம் கொண்டு வர வேண்டும் இதுவரை காலமும் நாம் பழைய செயற்பாடுகளுக்கு உள்வாங்கப்பட்டுருந்தோம். அந்த பழைய முறையினை நாம் மாற்றவேண்டும் நம்மை தேடிவரும் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவது எமது முக்கிய கடப்பாடாகும் இந்த 2025ம் ஆண்டில் இருந்து மக்களுக்கான சேவை தொடரும் என்றார்.

இதேவேளை இதன் போது 2025ஆம் ஆண்டுக்கான விஷேட வேலைத்திட்டங்கள் , அரச உத்தியோகஸ்தர்களின் பணிகள் குறித்து சுட்டி காட்டியதுடன் தொடர்ந்து அமைச்சர்கள் இருவரும் உத்தியோகஸ்தர்களுடன் சிநேக பூர்வமாக உரையாடினார்கள்.

அதனை தொடர்ந்து பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்தம் மன்றம்,
பனை அபிவிருத்தி சபை , அமைச்சின் அலுவலகத்தில் இயங்கும் நிர்வாகம் பிரிவு, அபிவிருத்தி பிரிவு, திட்டமிடல் பிரிவு கணக்காய்வு பிரிவு செயற்றிட்டங்கள், பொறியியல் பிரிவு, போன்ற பிரிவுகள் உள்ளிட்ட வெள்ளவத்தையில் அமைந்துள்ள அமைச்சின் “கற்பகம்” பனை உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் உட்பட மேலும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் கண்காணிப்பும் செய்யப்பட்டது.

இதன்போது பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் கலாநிதி சிவப்பிரகாசம் இணைப்புச் செயலாளர்  சிவனேசன் உள்ளிட்ட அமைச்சுகளில் முக்கியஸ்தர்களுடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.