
திருமலை விபத்தில் ஒருவர் பலி , 27 பேர் படுகாயம்
திருகோணமலை – கந்தளாய் அக்போபுர பிரதேசத்தில், தனியார் பஸ் வண்டியும் இராணுவ பாரஊர்தியும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி, ஏற்பட்ட விபத்தில், ஒருவர் பலியானதுடன் 27 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த கோர விபத்து கந்தளாய் பிரதேசத்தில், அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 86வது மைல் கல் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
கண்டி, மாவனல்ல, உயன்வத்த பகுதியில் இருந்து, 26 உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் திருகோணமலை நோக்கி வந்த, தனியார் பஸ் வண்டி திருகோணமலையிலிருந்து தென்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பஸ் வண்டியில் பயணித்த, 25 வயதான மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, முகமட் அஸ்கர் முகமட் அர்சாத் என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் , 25 பயணிகளும் படுகாயங்களுடன், கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.