திருமலை விபத்தில் இருவர் உயிரிழப்பு -வீடியோ இணைப்பு-

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை – கண்டி பிரதான வீதி 98 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனத்துடன் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மோதுண்டதில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது .

உயிரிழந்த இருவரும் வயது (48,50) மதிக்கத்தக்கதாகவும் ஒருவர் 5ம் கட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றவர் கல்மெடியாவ வடக்கு பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

குறித்த வீதியின் அருகே வயல் வெளி வீதி ஊடாக தனது வீட்டுக்கு செல்வதற்கு திருப்ப முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இரு சடலங்களும் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.