
சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று இன்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளது.
ஊர்காவற்துறைஇ நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரஞ்சித் என்ற ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி குழந்தையின் தந்தை உழவு இயந்திர திருத்த வேலையில் ஈடுபட்டுள்ளார், பின்னர் டீசலை ஒரு போத்தலில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
அவ்விடத்திற்கு வந்த குழந்தை சோடா என நினைத்து டீசலை அருந்தி மயக்கமுற்றது, பின்னர் குழந்தை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.