சிவனொளி பாத மலையை தரிசித்து விட்டு வீடு திரும்பிய குடும்பம் விபத்து: 5 பேர் காயம்

மஸ்கெலியா பகுதியில் இன்று திங்கட்கிழமை பார ஊர்தி ஒன்று குடை சாய்ந்து விபத்திற்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் புரவுன்லோ தோட்ட முத்துமாரியம்மன் ஆலய பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 10 அடி பள்ளத்தில் குறித்த பார ஊர்தி குடை சாய்ந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

ராகலை பகுதியில் இருந்து சிவனொளி பாத மலைக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் திரும்புகையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்திற்குள்ளான பார ஊர்தியில் பயணித்த மூன்று சிறார்கள், பெண் மற்றும் ஆண் ஒருவர் என ஐவர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்