
சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: 11 பேருக்கு வகுப்புத்தடை
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று செவ்வாய்க்கிழமை பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதன்படி இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புஸ்ஸல்லாவை – இஹலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் கடந்த 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டார்.
பகிடிவதைக்கு உள்ளானதை அடுத்து அந்த மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் பயின்றுவரும் நான்கு மாணவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மாணவர்கள் நால்வரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணித்த சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் முன்வைக்கப்படும் சமர்ப்பணங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சட்ட ஆட்சியை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்