கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்கள் கைது

-அம்பாறை நிருபர்-

வீடு மற்றும் மாடுகள் உட்பட வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி வந்த கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பாண்டிருப்பு உள்ளிட்ட புற நகர் பகுதிகளில் வீடுகள் உடைக்கப்பட்டும் மாடுகள் உட்பட பெறுமதியான பல பொருட்கள் களவாடிச் செல்லப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த கொள்ளை குழுவில் உள்ள 2 சந்தேக நபர்கள் சிசிடிவி காணோளி மற்றும் பொதுமக்களின் தகவல்களின் அடிப்படையிலும் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதுடன் 25, 28 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய கொள்ளைக் குழுவில் உள்ள மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து களவாடி செல்லப்பட்ட எரிவாயு சிலின்டர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனைய களவாடப்பட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் வழிநடத்தலில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க