
கொத்மலை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு (update)
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
விபத்தில் படுகாயமடைந்த 14 பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு சிறுவர்கள் அடங்குவதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவீரட்ட தெரிவித்தார் .
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.