
கொத்மலை பேருந்து விபத்து: பலியானோர் எண்ணிக்கை உயர்வு
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.