
கெலேகால அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் சுவாமி ஆலய இரதோற்சவ பெருவிழா
-நுவரெலியா நிருபர்-
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியோரத்தில் வீற்றிருக்கும் கெலேகால அருள்மிகு ஸ்ரீ கதிரேஷன் சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர இரதோற்சவ பெருவிழா ஏராளமான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது
ஆலயத்தில் 2025ஆம் ஆண்டுக்காக வருடாந்த பங்குனி உத்திர முத்தேர் தேர் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இதில் ஆம் திகதி புதன் கிழமை பால்குடம் பவனி மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் என்பன இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வசந்த மண்டபத்திலே விநாயகப் பெருமான் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மேள தாள வாத்தியங்கள் முழங்க மூன்று மூர்த்திகளும் உள்வீதி வலம் வந்து பிரதான வீதிகள் ஊடாக நுவரெலியா நகரில் வெளி வீதி எழுந்தருளி தனித்தனி தேரிலே ஏறி முத்தேர் பவனியாக இரதோற்சவம் இடம்பெற்றது.
இவ் பூஜைகள் அனைத்தும் குருசுவாமி பிரம்மஸ்ரீ தயாளன் குருக்கள் அவர்களின் புதல்வன் இளம்சுடர் நித்தியலங்கார பூசனம் பிரம்மஸ்ரீ த. சுதன்சர்மா ஆலய பிரதம குரு தலைமையில் ஆகம சாஸ்திர முறைபடி நடைபெற்றது
பொது மக்கள், ஆலய நிர்வாகிகள், உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.