
கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் விசேட பொதுச் சபைக் கூட்டம்
-திருகோணமலை நிருபர்-
கிண்ணியா விசன் ஹோட்டல் மண்டபத்தில் கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் விசேட பொதுச் சபைக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை கிண்ணியா மஜ்லிசுஸ் சூறா ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட சம்மேளன தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர், அக்கரைப்பற்று ,நிந்தவூர்,கல்முனை, ஒலுவில் ,மருதமுனை பிரதேச பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் சம்மாந்துறை மஜ்லிசுஷ் சூறா பிரதிநிதிகள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் மற்றும் பிரதிநிதிகள், கல்குடா ஜெம்இய்யதுல் உலமா தலைவர் மற்றும் பிரதிநிதிகள்.
கிண்ணியா,மூதூர்,குச்சவெளி,தோப்பூர்,கந்தளாய் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதிநிதிகள், கிண்ணியா மற்றும் மூதூர் மஜ்லிசுஸ் சூறா தலைவர் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக மூதூர் மஜ்லிசுஸ் சூரா அமீர் கரீம் ஹஸரத்தினால் பங்குபற்றுனர்களுக்கான நஸீகத் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தலைமையரையை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் ரவூப் ஏ மஜீத் நிகழ்த்தினார்.
ஓய்வுநிலை மேல்நீதிமன்ற பதிவாளரும் கிண்ணியா மஜ்லிசுஸ் சூறா செயலாளருமான எம்எஸ்எம்.நியாஸினால் கடந்தகாலங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட் சமாதான செயன்முறைகள், முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்ட விதம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து உரையாற்றிய சமாதான செயன்முறையின் நீண்டகாலமாக பணியாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான சபையின் முன்னாள் செயலாளரும் முஸ்லிம் சமாதான செயலகத்தின் மாவட்ட முன்னாள் பணிப்பாளருமான யுஎல்எம்என்.முபீனினால் 13ம் திருத்த அமுலாக்கமும் முஸ்லிம்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில் உலகத்தில் நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி, சமஷ்டி ஆட்சி முறைமைகளை விளக்கி இலங்கை முஸ்லிம்களுக்கான தீர்வு திட்டம் எவ்வாறு அமைய வேண்டுமென்றும் அது துறைசார்ந்த வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கியதுடன் இப்பணியை கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் முன்னெடுக்க வேண்டுமென விலாவாரியாக தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற சபையோர் கருத்துரையை தொடர்ந்து இருபத்தி ஏழுபேர் செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன் தற்காலிக தலைவராக மூத்த உலமா சம்மாந்துறை ஏசிஏஎம் புஹாரி ஹஸரத்தும் தற்காலிக செயலாளராக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளன செயலாளர் அன்வர்தீனும் தெரிவு செய்யப்பட்டனர்.
யாப்பு குழு நியமிக்கப்பட்டதோடு அக்குழுவின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண பிரதம சட்ட ஆலோசகர் சிரேஷ்ட சட்டத்தரணி அனிப்லெப்பை நியமிக்கப்பட்டார். மீண்டும் இரண்டு மாதங்களின் பின் பொதுச் சபையை மருதமுனையில் நடாத்தி யாப்பை அங்கீகரிப்பதுடன் நிரந்தர நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவெதென தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தை சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐஎம்.இப்ராகிம் நெறிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.