கவிஞர் மன்னாரமுது அஹ்னாப் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்: இலங்கை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது

நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட கவிஞர் அரசாங்கத்தின் பயங்கரவாத பட்டியலில் மன்னாரமுது அஹ்னாப் என தமிழ் வாசக சமூகத்தின் மத்தியில் நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசிம் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபராக இலங்கை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.

2023 ஜூன் 8 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி இலக்கம் 2335/16 மூலம் 301 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

“அவ்வப்போது திருத்தப்பட்டு ஆகஸ்ட் 1, 2022 திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 2291/02 இல் வெளியிடப்பட்ட, 21 மார்ச் 2014 திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 1854/41 இல் வெளியிடப்பட்ட நபர்கள் பட்டியலில் இறுதியாக திருத்தங்கள் செய்யப்பட்ட, குழுக்கள் மற்றும் தனி நபர்களின் பட்டியலின் உப அட்டவணையை நீக்கி பின்வரும் அட்டவணைகளை மாற்றுவதன் மூலம் மேலும் திருத்தப்பட்டுள்ளது.” என குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன வினால் வெளியிடப்பட்ட இலக்கம் 2291/02 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலில் 316 தனிநபர்கள் மற்றும் 15 அமைப்புகள் பெயரிடப்பட்டு அதில் அஹ்னாப் ஜசீமின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இலங்கையின் அதிகார வர்க்கத்தினருக்கும் புண்ணியம் கிடைக்கும் வகையில், அஹ்னாப் ஜஸீம் தற்போது தொழிலின்றி விவசாயம் செய்து வருவதாக மன்னாரமுது அஹ்னாபின் சட்டத்தரணி சஞ்சய் வில்சன் குணசேகர ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“யுஎன்டபள்யுஜிஏடி(UNWGAD) அவரது கைது மனித உரிமை மீறல் என அடையாளம் கண்டுள்ளது.” என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுஎன்டபள்யுஜிஏடி என்பது தன்னிச்சையான கைது மற்றும் தடுப்பு காவலில் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகளின் பணிக்குழு ஆகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க