கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் பிரவேசித்த இருவரால் பரபரப்பு!
-அம்பாறை நிருபர்-
வைத்திய பணிப்பாளரின் உரிய அனுமதியின்றி, வைத்தியசாலைக்குள் அத்துமீறி உட்பிரவேசித்த, இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்குள் இருவர் அனுமதி இன்றி உட்பிரவேசித்ததாக, வை;தியசாலையின் பாதுகாப்பு பணிக்கு பொறுப்பான அதிகாரியினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டிற்கமைய, குறித்த இருவரையும் கைது செய்த கல்முனை தலைமையக பொலிஸார், அவர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
கைதானவர்கள் கல்முனை மாநகரில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றின் பணியாளர்கள் என்றும், அவர்கள் இருவரும் வைத்தியசாலை பணிப்பாளரின் முன் அனுமதியின்றி சுத்தியலுடன் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து, வைத்தியசாலையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடி, முரண்பாடான கருத்துக்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் தெரிவித்துள்ளதாக, விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
எனினும், வழமை போன்று தாங்கள் புதிய ஆண்டிற்கான கலண்டர்களை, அரச தனியார் திணைக்களங்களுக்கு வழங்குவதற்காகவே வந்ததாகவும், வைத்தியசாலை சுவற்றில் கலண்டரை கொழுவி விட ஆணி அடிப்பதற்காகவே சுத்தியலுடன் வந்ததாகவும், தங்களை தவறாக புரிந்து கொண்டமையால் இவ்வாறான குழப்பநிலை ஏற்பட்டதாகவும், கைது செய்ய்பட்ட இருவரும் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில், வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மேலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிகாட்டலில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில், மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்