கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக யூ. எல். றியால் பொறுப்பேற்றார்

 

-மாளிகைக்காடு நிருபர்-

கல்முனை கல்வி வலயஇ கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக கல்முனை கல்வி வலயத்தின் தமிழ் பாட உதவிக்கல்வி பணிப்பாளர் யூ.எல். றியால் இன்று திங்கட்கிழமை கல்முனை கோட்டக்கல்வி பணிமனையில் வைத்து  தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள் முன்னிலையில் யூ.எல். றியால் தனது கடமைகளை பெறுப்பேற்று கொண்டார்.

கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயங்களின் தமிழ் பாட உதவிக்கல்வி பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிவரும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியான றியால் அப்பதவிக்கு மேலதிகமாகவே இந்த கோட்டக்கல்வி அதிகாரி பதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அர்ப்பணிப்புடன் கடந்த காலங்களில் சேவையாற்றிய முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி நஸ்மியா சனூஸ் விட்ட இடத்திலிருந்து சிறப்பாக செய்யவேண்டிய பொறுப்பு புதிய கோட்டக்கல்வி அதிகாரி ரியாலுக்கு இருப்பதாகவும், கடந்த காலங்களில் அவர் திறமையாக செயற்பட்ட அதிகாரி என்றவகையில் அவர் தன்னுடைய கோட்டத்தை முன்மாதிரியான கோட்டமாக உருவாக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இங்கு ஆசியுரை நிகழ்த்திய கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தனது உரையில் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களினால் மாலை அணிவித்து அழைத்துவரப்பட்ட முன்னாள், இந்நாள் கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கு கல்முனை வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள் தமது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.