
கல்கிஸ்ஸை இளைஞன் கொலை : மற்றுமொரு சந்தேக நபர் கைது!
கொழும்பு கல்கிஸ்ஸை – ஹுலுதாகொட பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹுலுதாகொட பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் இளைஞன் ஒருவன் சடலமாக கிடப்பதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்மலானை – மஹிந்தாராம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட இளைஞன் போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு அஞ்சு” என்பவரின் உதவியாளர் ஒருவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் மற்றுமொரு சந்தேக நபர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.