உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் நேற்று புதன்கிழமை உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன்போது அராலி மேற்கு, வட்டுக்கோட்டை என்ற முகவரியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன் (வயது 38) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு தனது உழவு இயந்திரத்தின் கீழே இறங்கி நின்றவாறு திறப்பினை இயங்க செய்துள்ளார்.

இதன்போது கியர் இயக்கத்தில் இருந்த உழவு இயந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்தது, இந்நிலையில் நிலைகுலைந்த குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்ததால் அவர்மீது உழவு இயந்திரத்தின் சக்கரம் ஏறியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்