இலங்கையில் தஞ்சமடைய சொத்துக்களை விற்று படகில் வந்தோம்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், ஏனையோரை இன்று சனிக்கிழமை மிரிஹானை முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும், அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு, குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட,  39 ஆண்களும், 27 பெண்களும், 49 சிறுவர்களும், அடங்குகின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அர்ஜீன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருந்தார்.

மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன

இதன் பின்னர், படகை செலுத்தி வந்த குற்றச்சாட்டில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இன்று மிரிஹானை தடுப்பு முகாமிற்கு  அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.

இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிஸாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும், தம்மை ஐ.நா பாராமரித்து வந்த நிலையில், அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கை நாட்டுக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கைக்கு வருகை தரும் நோக்கில், மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும், இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும், இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும், அந்த குடும்பத்தில் ஒருசிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று, தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் எட்டு இலட்சம் ரூபாய் வழங்கி படகினை கொள்வனவு செய்து, கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா குறித்த நபர்களை பார்வையிட்டு, அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுடனும், பொலிஸாருடனும் கலந்துரையாடியிருந்தார்.